நாராயணசாமியின் செக்யூரிட்டி கார் மீது டிப்பர் லாரி மோதல்
11/27/2014 4:26:44 PM
துரைப்பாக்கம்: முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, டெல்லிக்கு சென்று விட்டு இன்று காலை சென்னை திரும்பினார். பின்னர் கார் மூலம் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார். இவரது காருக்கு முன்னால் 2 கார்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சென்று கொண்டிருந்தனர். பின்னால் 2 கார்கள் வந்து கொண்டிருந்தது.சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வதற்காக அக்கரை என்ற இடத்தில் வலது புறம் நாராயணசாமியின் முன்னால் சென்ற பாதுகாப்பு கார் திரும்பியது. அப்போது வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் கம்பெனிக்கு சொந்தமான டிப்பர் லாரி வந்தது. லாரியை சிவகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.
இவர், சோழிங்கநல்லூர் செல்வதற்காக வலதுபுறம் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக நாராயணசாமியின் பாதுகாப்பு கார் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் சேதமானது. இந்த சம்பவத்தால் நாராயணசாமியின் கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கி வந்து நாராயணசாமி பார்வையிட்டார்.தகவல் அறிந்து அக்கரை சோதனை சாவடியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அந்த காரை அங்கேயே நிறுத்தி விட்டு நாராயணசாமியின் கார் புறப்பட்டது. சம்பவ இடத்தில் கார் மற்றும் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.