குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தயாரா? மேயருக்கு மா.சுப்பிரமணியன் கேள்வி
11/21/2014 3:41:57 PM
சென்னை: எங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகளை நேருக்கு, நேர் விவாதித்து நிரூபிக்க தயாரா என மேயர் சைதை துரைசாமிக்கு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் போதெல் லாம் மேயர் சைதைதுரைசாமி, திமுக மாநகராட்சி நிர்வாகங்களின் போது நிதி இழப்பு ஏற்பட்டது, நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தணிக்கைத் துறை சொன்னதாக ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.இந்த குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவர்கள் யார்? யார்? என்பதை நேரடியாக விவாதிக்கத் தயாரா எனக் கேட்டிருந்தோம். அதற்கு இதுவரை பதிலளிக்காத சைதை துரைசாமி, நேற்று நடந்த மன்றக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை விவாதத்துக்கு அழைத்திருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் மேயர் பொறுப்பு வகித்த சமயத்திலும், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் பொறுப்புகள் வகித்த சமயங்களிலும் நிர்வாகத்தினை திறம்பட நடத்தி தமிழக மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்று, மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பலவற்றை பெற்ற பெருமைக்குரியவர்.நான் விடுத்த அழைப்பை ஏற்க ஏன் உங்களுக்கு துணிவில்லை. நீங்கள் கூறும் குற்றச்சாட்டு களை நிரூபிக்க தயாரா? மேயர் மீது வழக்கு போட வேண்டுமெனில் அரசின் அனுமதி பெற வேண்டும் எனச் சொல்லி, அவ்வழக்கை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி ஒளிந்துகொண்ட நீங்களா எங்களை மீண்டும், மீண்டும் வம்புக்கிழுப்பது.
சைதை துரைசாமி சைதாப்பேட்டை முகவரியை தந்து விட்டு, தாம்பரம் அருகில் உள்ள ராஜகீழ்ப்பாக்கத்தில் பத்து ஏக்கர் பண்ணை பங்களாவில் வசித்து வருகிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், அதிமுக கவுன்சிலர்கள் அறிக்கை எனும் பெயரில் அதை மறுத்து ஒரு மொட்டை அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.ஆனால், ஒவ்வொரு நாளும் மாநகராட்சி கொடி கட்டிய காரை சைதாப்பேட்டையில் விட்டு விட்டு வேறொரு காரில் ராஜகீழ்ப்பாக்கத்திற்கு சென்று வருவதை அங்குள்ள போக்குவரத்து காவலர்கள் நன்றாகவே அறிவார்கள்.
இப்போதும் கேட்கிறேன், நீங்கள் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசிப்பதை மறுத்தால் சிறுதாவூர், கொடநாடு பங்களாக்களுக்கு இணையாக உள்ள இந்த 10 ஏக்கர் பண்ணை வீடு யாருக்குச் சொந்தமானது? துணிவிருந்தால், அதிகாரிகள் சொன்னார்கள், கவுன்சிலர்கள் சொன்னார்கள் என்று மொட்டை அறிக்கைகள் விடுவதை தவிர்த்து நேரடியாக பதிலளித்தால் உங்களது ஆண்மைத்தனத்தை நான் மெச்சிக் கொள்வேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.