சென்னை: சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (27). இன்டிகா காரை லீசுக்கு எடுத்து ஓட்டி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு, தனது நண்பர்கள் சிவக்குமார் (29), தேவா (24) ஆகியோருடன் வேளச்சேரி டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளனர். பின்னர் போதையில் காரில் வீடு திரும்பினர். சிவக்குமார் குடிபோதையில் ஓட்டியதால் கார் சாலையில் இங்கும், அங்கும் தடுமாறியபடி சென்றது.தரமணி பாரதி நகர் பஸ் நிலையம் அருகே சென்ற போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தின் மீது ஏறி தறிகெட்டு ஓடியது. பிளாட்பாரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த கலங்கரை விளக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (34), அவரது மனைவியான 8 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா (30) ஆகியோரின் தலை மீது கார் ஏறியது. இருவரும் தலை நசுங்கி இறந்தனர்.
சற்று தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த 63 வயது மூதாட்டி மீதும் மோதி சிறிது தூரம் போய் நின்றது. சக்கரத்தில் சிக்கிய மூதாட்டி சம்பவ இடத்தியிலேயே துடிதுடித்து இறந்தார். சம்பவத்தை பார்த்த மக்கள், கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் காரை ஏற்றி 3 பேரை கொன்ற சசிக்குமார், சிவக்குமார், தேவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் கொலைக்கு இணையான சட்டப் பிரிவான இந்திய தண்டனைச் சட்டம் 304(2), 279 (விபத்து ஏற்படும் என்று தெரிந்தும் வேகமாக ஓட்டுதல்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் 185, 187(குடிபோதையில் கார் ஓட்டுதல்), 134 (விபத்து ஏற்படுத்திய பிறகு காப்பாற்றாமல் சென்றது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரில் இதுபோன்ற விபத்து ஏற்படுத்திய தொழில் அதிபரின் மகன் சாஜிஸ் மீதும் இந்த பிரிவுகளின் கீழ்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, இந்த விபத்திலும் கொலைக்கு இணையான பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.