தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு மே 1ம் தேதி துணை ராணுவம் வருகை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மொத்தமுள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சுமார் 9630 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலுக்கு 300 பட்டாலியன் துணை ராணுவ வீரர்கள் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
275 பட்டாலியன் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். மே 1ம் தேதி முதல் துணை ராணுவ வீரர்கள், தேர்தல் பணிக்காக தமிழகம் வருவார்கள்.17 வாக்குப்பதிவு மையங்களில் முற்றிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும். 11130 வீல் சேர்கள் வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. 29 ஆயிரத்து 291 கட்டிடங்களில் 65 ஆயிரம் மையங்கள் இருக்கும். பொதுமக்கள் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.