சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:முழு உடல் பரிசோதனைத் திட்டம் உட்பட 22 திட்டங்களை சுகாதாரத்துறை சார்பில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 110வது விதியின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1.27லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாத வெற்று அறிவிப்புகளாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. கரூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும், அடுத்தகட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் கரூர் மின்னாம்பள்ளியில் இடம் தேர்வு செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் இன்னும் 9 மாதங்களில் தொடங்கவிருக்கும் 2016-17ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கு கரூர் மருத்துவக் கல்லூரி எப்படி தயாராகும் எனத் தெரியவில்லை.
அதேபோல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பு கடந்த 12.01.2025 அன்றே சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டு விட்டது. 2011ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, புதிய தலைமைச் செயலகத்தை மாற்றம் செய்து திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியைத் தவிர எந்த ஒரு மருத்துவக் கல்லூரியும் புதிதாக அறிவிக்கப்பட்டு திறக்கப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு திறக்கப்பட்ட திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முந்தைய ஆட்சியில் 2009ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாகும். அதேபோல், சிவகங்கை மருத்துவக் கல்லூரியும் முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டது தான். அதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட மேலும் 5 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்காக அ.தி.மு.க. அரசு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
கடலூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக 2011ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு 2011ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புகளை செயல்படுத்த கடந்த 4 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கொள்கையளவில் முந்தைய அரசு ஒப்புதல் அளித்த போதிலும், அதற்கு இதுவரை செயல் வடிவம் தரப்படவில்லை. இத்தகைய சூழலில் புதிய மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்குவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டால் மட்டும் போதாது. அதற்குப் பதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.