தேனி: தேர்தலின்போது வாக்காளர்களை கவர அதிமுக சார்பில் தொண்டர்கள், மக்களுக்கு வழங்க லட்சக்கணக்கில் தொப்பிகள் வரவழைக்கப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்தொப்பிகளை ஓபிஎஸ் மகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆர்டரின்பேரில் வாங்கியதாக கூறப்படுகிறது.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள்முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஆனால், ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அரசு இயந்திரங்கள் முழுவீச்சில் இறங்கி பணிகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிமுக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்திருப்பதை மூடி மறைக்கவும், தேர்தலின்போது வாக்காளர்களை கவரவும் அதிமுக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அதிமுக ஆதரவு சுயஉதவிக்குழுக்கள் குறித்து ஏற்கனவே கண்டறியப்பட்டு, அக்குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்க அவர்களிடம் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதற்காக அவ்வப்போது சுயஉதவிக்குழுவினரின் கூட்டமும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதிகளில் வாக்காளர்களை கவர அதிமுகவினர் தற்போது வீடு, வீடாக சென்று வாக்காளர்கள் பட்டியலை சரிபார்ப்பது போல அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்து வருகின்றனர். இதில் பெரிய அளவில் தேவையை சொன்னால், தேர்தல் முடிந்ததும் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்படுகிறது. சின்ன, சின்ன தேவைகளை உடனடியாக முடிக்க கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது தொண்டர்களுக்கு தொப்பிகள் வழங்க ஓபிஎஸ் தரப்பினர் மூலமாக மதுரையில் ஆர்டர் செய்யப்பட்ட தொப்பிகள் பெரியகுளத்தில் ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினரே பரவலாக பேசுகின்றனர். தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர்கள் கோடை வெப்பத்தில் இருந்து தப்ப சுமார் ஒரு லட்சம் தொப்பிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, மாவட்ட உளவு துறை போலீசாரோ, தனிப்பிரிவு போலீசாரோ இத்தகவலை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காதது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.தொடர் அத்துமீறல்தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிமுகவினர் அத்துமீறல் அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலவச ஸ்கூல் பேக்குகள், காலணிகள், சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் ஓபிஎஸ் தொகுதியான போடியில் விநியோகிக்க முயன்றது தெரிய வந்தது. தற்போது தொப்பிகள் பதுக்கல் விவகாரம் மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.