திருமலை, -ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் முகத்தை மூடியபடி கேமரா முன் வந்த ஒரு பெண், தன்னை திருப்பதி டிஎஸ்பி சீனிவாசலுவின் 2வது மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் சொன்ன தகவல்கள் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு அனந்த்பூர் மாவட்டத்தில் ஒரு வழக்குத்தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். இதுதொடர்பாக அவ்வப்போது சீனிவாசலுவை போனில் தொடர்பு கொண்டேன். அப்போது, அவர் என்னிடம், தான் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர் என்றும், இதனால், தற்போது தனிமையில் வாடுவதாகவும் வேதனையுடன் கூறினார்.
இதைத்தொடர்ந்து, நானும், அவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம். பின்னர், எனது கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டார். அதே பகுதியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு திருப்பதிக்கு மாற்றப்பட்டார். புதிய வீடு பார்த்து விட்டு என்னை அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அதன்பிறகு என்னை தொடர்பு கொள்ளவில்லை. மேலும், நான் தொடர்பு கொண்டாலும் பேச மறுத்தார். இதனால் சந்தேகமடைந்த நான் திருப்பதிக்கு சென்று எனக்கு தெரிந்த போலீசாரிடம் விசாரித்தேன். அப்போது, சீனிவாசலுவுக்கு திருப்பதியில் ஒரு குடும்பம் இருப்பது தெரியவந்தது. அவர் எத்தனையாவது மனைவி என்பது தெரியாது. மேலும், போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் உள்ளிட்ட பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். மேலும், தனக்கு கீழ் பணிபுரியும் பெண் போலீசாரை மிரட்டி தனது இச்சைக்கு இணங்க வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
அதேபோல், தனது வீட்டில் வேலை செய்யும் 16 வயது சிறுமியையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் போலீசார் புகாரை வாங்க மறுக்கின்றனர். மேலும், இவரால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும், அந்த நிகழ்ச்சியில் சீனிவாசலுவால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக ஒரு பெண் போலீசும், 16 வயது சிறுமியும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து டிஎஸ்பி சீனிவாசலு சில பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற சில புகைப்படங்களை அந்த பெண் காண்பித்தார். போலீசார் புகார் வாங்க மறுப்பதால் தான் தொலைக்காட்சியை அணுகவேண்டியதாயிற்று. இதுபோன்ற பல்வேறு ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அதை வெளியிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்த தகவல் வெளியானதும் ஆந்திர மாநில போலீசார் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.