புதுடெல்லி: லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா இன்று காலமானார். லோக்சபா முன்னாள் சபாநாயகரும், மேகாலயா முன்னாள் முதல்வருமான சங்மா இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68. சங்மாவின் மரணத்தை லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதை தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. சங்மாவுக்கு இரங்கல் தெரிவித்த சுமித்ரா மகாஜன் , மக்களவையின் மிகச் சிறந்த தலைவராக சங்மா பணியாற்றினார். அவரிடம் இருந்து ஏராளமானவற்றை நான் கற்றுக் கொண்டுள்ளேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவராக சங்மா விளங்கினார் என்றார்.
சங்மா மறைவு குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கலில், சுயமாக அரசியலில் முன்னேறிய ஒரு தலைவராக சங்மா விளங்கினார். வடகிழக்கு பகுதிகளின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது மறைவு அப்பகுதியில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 1947ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி மேகாலயாவில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சபாகத்தி என்ற கிராமத்தில் சங்மா என்ற பூர்னோ அஜிதோக் சர்மா பிறந்தார். அங்குள்ள சிறிய மலைகிராமத்தில் கடினமான சூழலுக்கு மத்தியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் அசாமில் உள்ள திப்ருகர் பல்கலையில் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் படித்தார்.
காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த சங்மா பின்னர் அதிலிருந்து 2012ம் ஆண்டு வெளியேறினார். பின்னர் 2013ம் ஆண்டு தேசிய காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.சங்மா 9 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார். 11வது லோக்சபாவின் சபாநாயகராக சங்மா பொறுப்பு வகித்தார். மேலும் அவர் 1988 முதல் 1990 வரை மேகாலயா முதல்வராகவும், 1990 முதல் 1991 வரை எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.சங்மா மறைவுக்கு தமிழக கவர்னர் ரோசையா உள்பட பல்வேறு கட்சிகளை ேசாந்்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.