புதுடெல்லி: மேற்கு வங்க சாரதா மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு புயல் வீசத் தொடங்கியது. இந்த நிறுவனம் கொல்கத்தாவை மையமாக கொண்டு சுதீப்தா சென் என்பவரால் தொடங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலும் பொது மக்களின் பணத்தை ரூ.30 ஆயிரம் கோடி வரை சுருட்டியிருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது.
சிட்பண்ட் தலைவர் சுதீப்தா சென், திரிணாமுல் அமைச்சர் மதன் மித்ரா, எம்பி குணால் கோஷ், ஜெய் போஸ், டிஜிபி ரஜத் மஜூம்தார் உள்ளிட்டோரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் மனோ ரஞ்சனா சிங் சொந்தமாக தொலைகாட்சி சேனல் தொடங்க முயற்சித்ததாகவும், இதற்காக சுதீப்தா சென் பல கோடி வரை கடன் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுதீப்தா சென் சிபிஐக்கு எழுதியிருந்த கடிதத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.
சுதீப்தா சென்னின் கடிதத்தில், மனோரஞ்சனா சிங் தனது பாசிட்டிவ் குரூப் நிறுவனத்தை விற்பது தொடர்பாக என்னை அணுகினார். மனோரஞ்சனா சிங், கவுஹாத்தியில் டிவி சேனல் ஒன்றை தொடங்க விரும்புகிறார். அதனால் அவருக்கு ரூ.42 கோடி கொடுத்து உதவுங்கள் என்று நளினி கேட்டுக் கொண்டார். இதற்கான ஒப்பந்தத்தையும் அவர் தயாரித்திருந்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர் கட்டணமாக ஒன்றரை ஆண்டு காலத்துக்கு ரூ.1 கோடி நளினி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். மேலும் கடந்த 2011ம் ஆண்டு சுதீப்தா ஏராளமான இமெயில்களை நளினி சிதம்பரத்திற்கு அனுப்பி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து கடந்த மாதம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் நளினி சிதம்பரம் பெயரும் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த விவகாரத்தில் நளினி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே இஷரத் ஜெகான் விவகாரத்தில் ப.சிதம்பரம் சர்ச்சையில் சிக்கியுள்ள வேளையில் தற்போது நளினி சிதம்பரம் மீது சாரதா மோசடி தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.