நிஜ வளர்ச்சி எது?
9/7/2025 4:39:09 PM
உலகின் அதிவேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா இருக்கிறது. அதேசமயம், 127 கோடி மக்கள்தொகை கொண்ட தேசம், இன்னும் ஏழைகள் நிறைந்ததாக இருக்கிறது. பணக்காரர்கள் - ஏழைகள் இடையேயான இடைவெளி அதிகம். இதில், ரஷ்யா முதலிடமும், இந்தியா 2ம் இடமும் வகிக்கின்றன. ரஷ்யாவின் மொத்த வளத்தில் 62 சதவீதம் பெரும் கோடீஸ்வரர்கள் கையில் இருக்கிறது. இந்தியாவிலோ இது 54 சதவீதம். சர்வதேசப் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இன்னும் மீள முடியாமல் தடுமாறுகின்றன. அதேசமயம், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்திருக்கின்றன. தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தொழில் வளர்ச்சிக்கேற்ற வேலைவாய்ப்போ இல்லை. படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர்.
வேலைவாய்ப்பு என்பது ஒருவரது திறமை, கல்வி, வருவாய் வாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களைக் கொண்டு அமையக்கூடியதுதான். ஆனால், முதலீடு குவிந்து உற்பத்தி பெருகியும், வேலைவாய்ப்பு இல்லை என்றால், வளர்ச்சி சமச்சீரானதாக இல்லை என்பதை நாம் ஒத்துக்கொண்டாக வேண்டும்.
மக்கள் அனைவரும் கவுரவத்துடன் வாழ்கிறார்கள் என்றால், அந்த நாடு ஏழைகள் இல்லாததாக இருக்க வேண்டும். மோடி அரசு பொறுப்பேற்றதும், கருப்புப்பணத்தை ஒழிப்பதாகச் சபதம் எடுத்தது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பெரும் பண முதலைகளின் கரன்சிகளைப் பிரித்துக்கொடுத்தாலே, நாட்டில் ஏழைகள் இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.‘நிதி நிர்வாகம் சிறப்பான முறையில் நடைபெற வேண்டும் என்றால், ஊழல், கருப்புப்பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவது முக்கியம். பொருளாதாரக் குற்றச்செயல்களுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளுக்கு எதிராக ஜி20 நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புப்பண மோசடியில் சிக்கி, வெளிநாடுகளில் பதுங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களைச் சொந்த நாட்டிடம் நிபந்தனையின்றி ஒப்படைக்க வேண்டும். நிதி தொடர்பாக சர்வதேச அளவில் கட்டுப்பாடுகளும், ஊழலை மூடி மறைக்கும் வங்கிகளின் அதீத ரகசியக் காப்பு நிலையும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று சீனாவில் ஜி20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
அவரது விருப்பம் நிறைவேற வேண்டும் என்று சர்வதேச நாடுகள் விரும்பினால்கூட, கருப்புப்பணத்தை வெளிக்கொணர்வதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான், பண முதலைகள் குளிர்காய்கிறார்கள்.
துவக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரை, அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்தாலே, ஏழை, பணக்காரர்கள் இடையிலான இடைவெளி விரைவில் குறைவதற்கான வாய்ப்பு உருவாகும். அத்தோடு, கருப்புப்பணப் பதுக்கலையும் வேரோடு பறிக்கும் சபதத்தையும் மோடி அரசு அதிதீவிரமாகத் துவக்க வேண்டும்.