நோயாளிகள் தொடர் புகார் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரி திடீர் ஆய்வு
6/9/2025 2:13:39 PM
பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், சக்கரை நோய், இதய நோய், சித்து மருத்துவம், மகப்பேறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, காட்டூர், திருப்பாலைவனம், கவரப்பேட்டை, பெருவாயல், தச்சூர் கூட்டு சாலை, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரியாக இருந்த நாகேந்திர பிரசாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த பதவிக்கு, இதே மருத்துவமனை மருத்துவர் ஸ்டாலின் பிரகாரன் நியமிக்கப்பட்டார்.
அதற்கு பிறகு, புறநோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக பெண் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட சுகாதார துறை அதிகாரிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தைகள் நல மருத்துவர், ஒரு பல் மருத்துவர், 2 பொதுநல மருத்துவர் என 4 பேர்தான் உள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மோகனன், பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். மருந்து கிடங்கு, உணவகம், பிரேத பரிசோதனை அறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் சென்று பார்வையிட்டார். அப்போது, அவரிடம், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சரமாரி புகார் அளித்தனர். புகாரை பெற்ற கோகனன், உயரதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.