ரூ.14 லட்சம் கடற்குதிரையை கடத்தியவர் கைது
5/25/2016 3:43:52 PM
ராமநாதபுரம் : புதுக்கோட்டை மாவட்டம், திருப்புன்னவாசலை சேர்ந்த மாயழகு மகன் சுரேஷ் (35). இவர் நேற்றிரவு ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் 35 கிலோ கடற்குதிரையை வாங்கிக்கொண்டு ஒரு சாக்குப்பையில் பதுக்கி வைத்திருந்தார். இந்த கடற்குதிரைகளை தொண்டியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பஸ்சில் அனுப்புவதற்காக பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தார். இத்தகவல் அறிந்த வனக்காப்பாளர்கள் ஜோசப், மதியழகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரிடம் விசாரித்தனர். பின்னர் சுரேஷ் மாவட்ட கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்திய கடற்குதிரைகளின் சர்வதேச மதிப்பு ரூ.14 லட்சம். இவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.