கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பைசரியான நேரத்தில் போலார்டு எழுச்சி கண்டுள்ளார் ரோகித் சர்மா பாராட்டு
4/29/2016 2:24:09 PM
மும்பை: ஐபிஎல் தொடரில் 24வது லீக் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. கேப்டன் கம்பீர் 59 (45 பந்துகள், 6 பவுண்டரி, 1 சிக்சர்), உத்தப்பா 36 ரன் (20 பந்துகள், 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மும்பை தரப்பில் சவுத்தி 2, மெக்கிளனகன், ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்ைட மட்டும் இழந்து 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 68 (49 பந்துகள், 8 பவுண்டரி, 2 சிக்சர்), போலார்டு 51 ரன் (17 பந்துகள், 2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர்.
கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2, உமேஷ்யாதவ், ஷாகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதால், மும்பை, புனே, நாக்பூர் ஆகிய ஊர்களில் ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு சீசனில் நடந்த கடைசி போட்டியாக இது அமைந்தது.
தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், இந்த தோல்விக்கு நாங்கள் எவ்வித சாக்குபோக்கும் சொல்லப்போவதில்லை. 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். மும்பை அணியின் பவுலர்கள் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர். ஆனால் எங்கள் பவுலர்கள் அதை செய்ய தவறி விட்டனர். மும்பை அணி எங்களை 174 ரன்களுக்கு சுருட்டி விட்டது. இந்த பிட்ச்சில் இது சேஸ் செய்யக்கூடிய டோட்டல்தான். கிரிக்கெட் வீரர்களாக ேபட்டிங் மற்றும் பவுலிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இங்கிருக்கும் பனி உள்ளிட்ட சூழ்நிலைகளை தோல்விக்கு காரணமாக சொல்லக்கூடாது. டாசும், பனியும் நமது கைகளில் இருப்பதில்லை. தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம் என்றார்.
மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், போலார்டின் பார்ம் மிக முக்கியமானது. சரியான நேரத்தில் அவர் எழுச்சி கண்டுள்ளார். மும்பை ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் எப்போதும் தரமான கிரிக்கெட்டை ரசிப்பவர்கள். துரதிருஷ்டவசமாக இங்கே எங்களின் கடைசி போட்டியாக இது அமைந்து விட்டது. இதனால் போலார்டின் அதிரடியை காண அவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். வாங்கடே மைதானத்தில் பல ஆண்டுகளாக விளையாடியுள்ளோம். ஆனால் இனி எந்த மைதானத்தில் விளையாட போகிறோம் என்று தெரியாது. ஆனால் எங்கேயாக இருந்தாலும் சிறப்பாக விளையாடுவோம் என்றார்.