அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு
4/9/2025 12:28:04 PM
கவுகாத்தி: அசாமில் இறுதி கட்ட தேர்தல் மற்றும் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.அசாமில் இறுதி கட்டமாக 61 தொகுதிகளில் வருகிற 11ம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 2ம் கட்டமாக வாக்குபதிவு அதே நாளில் நடக்கிறது.இன்றுமாலையுடன் அசாமில் பிரசாரம் ஓய்வதால் அங்கு தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம் போல் காங்கிரஸ், பாஜ தலைவர்கள் ஒருவரை ஒருவர் மேடைகளில் வெளுத்து கட்டினர். மக்களை பிளவு படுத்தும் வேலைகளில் மோடி இறங்கியுள்ளதாக சோனியா குற்றம் சாட்ட, அசாம் காங்கிரஸ் அரசு ரிமோட் கன்ட்ரோல் அரசு என மோடி பதிலடி கொடுக்க, பனாமா லீக்ஸ் குறித்து மோடி வாயை திறக்காதது ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்ப தேர்தல் பிரசாரத்தில் புயல் வீசி வருகிறது.
இறுதி கட்ட தேர்தல் என்பதாலும், அசாமில் எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும் பாஜ அங்கு பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜ கணிசமான வெற்றியை ஈட்டியிருந்ததால், தற்போது சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை ஈட்டி விடலாம் என கனவு காண்கிறது. கடந்த முறை மோடி அலை கை கொடுத்ததை போல, இம்முறை பாஜவுக்கு அவரது பிரசாரம் உதவுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. முதல் கட்ட வாக்குபதிவில் எப்போதும் இல்லாத அளவுக்கு 81 சதவீதம் வாக்குகள் பதிவானதால், காங், பாஜ ஆகிய இரண்டுமே அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் 2ம் கட்டமாக 31 தொகுதிகளில் வாக்கு பதிவு நடக்கிறது. பாங்குராவில் உள்ள சாத்னாவில் அதிகபட்சமாக 10 வேட்பாளர்களும், கேஷ்பூர் தனி தொகுதியில் குறைந்த பட்சமாக 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட வாக்குபதிவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி மேற்கு வங்கத்தில் மம்தா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5ம் கட்டமாக தெற்கு கொல்கத்தாவில் உள்ள போவானிப்பூரில் நடைபெறும் தேர்தலுக்கு மம்தா போட்டியிடுவதையொட்டி ஏராளமான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். அசாமில் இறுதி கட்ட தேர்தலை மேற்கு வங்கத்தில், இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி உச்சகட்ட பிரசாரம் நடைபெற்றது.