நைஜீரியாவை சேர்ந்த 2 வயது சிறுவன்
4/5/2025 2:24:44 PM
நைஜீரியாவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஒருவன் கடந்த 2 மாதங்களுக்கு முன் தெருவில் அனாதையாக எலும்பும் தோலுமாக அலைந்துகொண்டிருந்தான். அவனை அன்ஜா ரிங்கரென் லோவன் என்ற பெண் சமூக சேவகர் மீட்டு டென்மார்க் கொண்டு வந்தார். அங்கு அந்தச் சிறுவனை மருத்துவ பரிசோதனை செய்ததில், அவனது வயிற்றில் புழுக்கள் இருப்பதும், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்திருப்பதும் தெரியவந்தது. அவனுக்கு பெரும் பொருட்செலவில் நாள்தோறும் ரத்தம் ஏற்றவேண்டிய நிலை இருந்ததால், பல்வேறு சமூகவலைதளங்களில் நன்கொடை கேட்டு அன்ஜா செய்தி வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்த சிறுவனின் மருத்துவ செலவுக்கு உலகம் முழுவதும் சுமார் ரூ . 6 கோடி நன்கொடை கிடைத்தது. ‘ஹோப்’ என பெயர் சூட்டப்பட்ட அந்த சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடங்கி, எட்டே வாரங்களில் ஆரோக்கிய சிறுவனாக மாறிவிட்டான். தற்போது மற்ற குழந்தைகளுடன் விளையாடுகிறான். ‘அவனுக்கு ஒரு பிறவிக் குறைபாடு இருப்பதால், அடுத்த வாரம் மற்றொரு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அதன்பிறகு அவன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்’ என்கிறார் அன்ஜா லோவன்.