இம்மாத இறுதியில் கூட்டணி முடிவு ஜி.கே.வாசன் பேட்டி
3/23/2016 2:53:38 PM
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவரை சந்தித்து கூட்டணி அமைத்துள்ளனர். தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி அமைத்துள்ளது என்பதை அவர்கள் அறிவித்துள்ளனர். மக்கள் நலக்கூட்டணி தங்களுக்கு ஏதுவான முடிவை அறிவித்துள்ளனர். மேலும் தாங்கள் ஏற்றுக் கொண்ட தலைமையை அறிவித்திருப்பது அவர்கள் உரிமை. அதை அவர்கள் உறுதிபட வெளிப்படுத்தியுள்ளனர். இதில் தமாகாவுக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அதில் தலையிட விரும்பவில்லை.
அதிமுகவுடன் கூட்டணியா என கேட்கிறீர்கள். தமாகா பொறுத்தவரை கூட்டணி பற்றிய இறுதி முடிவை இம்மாத இறுதிக்குள் அறவிப்பேன். அதுவரை எந்தவிதமான யுகங்களுக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை. தமாகா எந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட போகிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கூட்டணி குறித்து எந்த தகவலாக இருந்தாலும் தமாகா அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கும். ஏற்கனவே கூறியது போல தமாகா இறுதி நிலையை இம்மாத இறுதியில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாக புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘‘உண்மையாக அதுபோன்ற புகார்கள் வந்தால் தமாகா அதை எடுத்து வைக்கும்’’ என ஜி.கே.வாசன் கூறினார்.