ராகுலுடன் கன்னையா குமார் சந்திப்பு
3/22/2016 3:17:30 PM
புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அப்சல் குரு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கலந்து கொண்டு ஆதரவு அளித்தார்.
இந்நிலையில் கன்னையா குமார் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கன்னையா குமார் ஒரு இடதுசாரி மாணவர் சங்க தலைவர் என்ற முறையில் இடதுசாரி கட்சிகளை ஆதரித்து கேரளா, மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ஜாமீனில் வந்துள்ளதால் சட்ட ரீதியான காரணங்களால் பிரசாரத்தில் ஈடுபட போவதில்லை என கன்னையா குமார் தரப்பு கூறியது.
இந்த சூழலில் கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர் சங்க பிரதிநிதிகள் 5 பேர் டெல்லியில் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் 11 மணிக்கு சந்தித்து பேசினர்.
சந்திப்புக்கான விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. தன்னை விடுதலை செய்யக் கோரி ராகுல் இரண்டு முறை போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கன்னையா சந்தித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.