காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது மெகபூபா பேட்டி
3/22/2016 3:16:23 PM
புதுடெல்லி: காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என பிடிபி தலைவர் மெகபூபா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக இருந்த முஃப்தி முகமது சயித் கடந்த ஜனவரி 7ம் தேதி உயிரிழந்தார். அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜ மற்றும் பிடிபி இடையே இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கடந்த சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
இருந்த போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்பட்டது. பிடிபியின் நிபந்தனைகளை ஏற்க பாஜ மறுத்து விட்டதால் காஷ்மீரில் இழுபறி நிலை நீடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மெகபூபா முப்தி இன்று காலை பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். பின்னர் மெகபூபா நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி உடனான எனது சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.