நந்திவரம் பெரிய ஏரியை சீரமைக்க கோரிக்கை
3/21/2016 2:44:31 PM
கூடுவாஞ்சேரி: சென்னையை அடுத்த நந்திவரத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர், எதிர் பகுதியில் உள்ள 1500 ஏக்கர் விவசாய நிலங்களின் நீர் பாசனத்துக்கு உதவியாக இருந்து வந்தது. இதன்மூலம் காலம் காலமாக விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்து வந்தனர்.அதுமட்டுமல்லாமல் கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கல், நல்லம்பாக்கம், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும் பள்ளி மாணவர்களும் நந்திவரம் ஏரிக்கரை வழியாக கூடுவாஞ்சேரிக்கு சைக்கிள் மற்றும் பைக்குகளில் பயணம் செய்து வந்தனர்.இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரி நிரம்பி வழிந்தது. இதைக் கண்டதும் ஏரி ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ஆக்கிரமிப்பாளர்களும் சில சமூகவிரோதிகளும் 3 இடங்களில் வெடிகுண்டு வைத்து ஏரிக்கரையை தகர்த்தனர்.
இதனால் ஏரி உடைந்து, அதில் தேங்கியிருந்த மழைநீர் வீணாக வெளியேறியது. தற்போது பெரிய ஏரி தண்ணீரின்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் சோகத்தில் உள்ளனர். இங்கு வெடி வைத்து தகர்க்கப்பட்ட ஏரிக்கரையை போலீஸ் உயரதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் என பல்வேறு துறை அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டனர். அதன் பின்னர் ஏரிக்கரை சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆனால், இந்த ஏரிக்கரையை சரிவர சீரமைக்காமல் அரைகுறையாக அமைத்துவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர். இதனால் ஏரிக்கரை வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேலும் ஏரிக்கரையை உடனடியாக பலப்படுத்தி தரவேண்டும். ஏரிக்கரையை சரிவர சீரமைக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.