போராட்டம் தீவிரமடைவதால் தஞ்சை விவசாயியிடம் டிராக்டர் ஒப்படைப்பு: போலீஸ், வங்கி நிர்வாகம் பணிந்தது
3/14/2016 3:02:43 PM
திருச்சி: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாலன்(40), விவசாயி. இவர் டிராக்டர் வாங்குவதற்காக தஞ்சையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2011ம் ஆண்டு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக 6 தவணைகளில் ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 200 செலுத்தி உள்ளார். இன்னும் 2 தவணைகளில் ரூ.1 லட்சம் வரை அவர் திருப்பி செலுத்த வேண்டும் என நிதி நிறுவனம் நெருக்கடி கொடுத்து வந்தது.இந்நிலையில் கடந்த வாரம் அந்த நிதி நிறுவன அதிகாரிகள் பாப்பாநாடு போலீசாருடன் சென்று பாலனை தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
போலீஸாரின் தாக்குதல் சம்பவம் வாட்ஸ்அப்களில் ெவளியானதால் டெல்டா மாவட்டங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அனைத்து விவசாய சங்கங்களும் போராட்டத்தில் குதித்தன.இந்நிலையில் பாலனை தாக்கிய 3 ஏட்டுகள் மட்டும் தஞ்சை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.இன்ஸ்பெக்டர் குமாரவேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இன்று தஞ்சையில் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று பாலன் கடன் வாங்கிய நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பாலன் வீட்டுக்கு வந்து டிராக்டரை ஒப்படைத்து விடுகிறோம். இனி உள்ள தவணைகளையும் செலுத்த வேண்டாம் என்று சமாதானம் பேசினர்.ஆனால் பாலன் டிராக்டரை வாங்க மறுத்து விட்டார். இதனால் வங்கி ஊழியர்கள் அந்த டிராக்டரை பாப்பாநாட்டில் உள்ள பாலனின் உறவினர் வீட்டு முன் நிறுத்திவிட்டு சென்று விட்டனர்.தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வந்ததால் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தும்படி தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு அரசிடம் இருந்து நெருக்கடி வந்தது. இதனால் எஸ்.பி. மயில்வாகனன் பாலனிடம் பேசினார். அதைத்தொடர்ந்து இன்று பாலன் டிராக்டரை பெற்றுக்கொள்ள சம்மதித்து உள்ளார். அதன்படி அவரிடம் டிராக்டர் இன்று ஒப்படைக்கப்படுகிறது.