உத்திரமேரூர் பகுதியில் அம்மா சிமென்ட் பெற லஞ்சம்
3/14/2016 2:43:56 PM
உத்திரமேரூர்: தமிழக அரசின் சார்பில் ஏழைகள் வீடு கட்டுவதற்காக மானிய விலையில் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு மூட்டை ரூ.190 என்ற அளவில் விற்கப்படுகிறது. 100 சதுர அடியில் வீடு கட்ட வேண்டுமானால், 50 மூட்டை சிமென்ட் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேற்கொண்டு தேவைப்பட்டால் அதற்கான வரைபடத்தை காட்டினால் வழங்கப்படும். இதில் பயன்பெறும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட விஏஓ.விடம் கடிதம் பெறுவதோடு, வீடு கட்டுவதற்கான வரைபடத்தை அந்தந்த பகுதியில் உள்ள அரசின் சிமென்ட் குடோனில் கொடுத்து சிமென்ட் பெற்று கொள்ளலாம். இப்படி வழங்கப்படும் முறையில், சில இடங்களில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
உத்திரமேரூர் பகுதிகளில் சிமென்ட் பெறுவதற்கான கையொப்பம் பெற விஏஓவுக்கு ரூ.100 கொடுத்தால்தான் கடிதம் வழங்கப்படுமாம். அதோடு மட்டுமல்லாமல், இத்தகையை கடிதம் மற்றும் வரைபடத்துடன் உத்திரமேரூர் அருகே பங்களாமேடு பகுதியில் உள்ள அரசின் சிமென்ட் குடோனில் சிமென்ட் வாங்க சென்றால் ஒரு மூட்டைக்கு ரூ.7 வசூலிக்கப்படுகிறது. மேலும் சிமென்ட் மூட்டைகளை வெளியே எடுத்து வந்தாலேயே அங்கிருக்கும் சிலர், ரூ.12 கொடுத்தால்தான், இங்கிருந்து வெளியே கொண்டு செல்ல இயலும் என்று கறாராக வசூலிக்கின்றனர். பணத்தை கொடுக்க மறுத்தால் பல்வேறு காரணங்களை காட்டி சிமென்ட் மூட்டைகள் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஏழை பயனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பிரமுகர்கள் சென்றால் அவர்களுக்கு உடனடியாக சிமென்ட் வழங்கப்படுகிறது. ஏழைகளை மட்டும் அலைகழிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என ஆதங்கத்தில் உள்ளனர்.