திகார் சிறையில் கைதிகள் பயங்கர மோதல் 2 பேர் பலி, அதிகாரி உள்பட 6 பேர் காயம்
10/8/2025 2:40:13 PM
புதுடெல்லி: திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 கைதிகள் கொல்லப்பட்டனர். துணை கண்காணிப்பாளர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். டெல்லியில் உள்ள திகார் சிறை இந்தியாவில் உள்ள சிறைகளில் மிக முக்கியமானதாகும். மத்திய அரசுக்கு எதிராக குற்றங்கள் புரிபவர்கள் சிபிஐயால் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் தான் அடைக்கப்படுவார்கள். இதனால் இங்கு பாதுகாப்பு மிகவும் பலமாக இருக்கும். சொந்த மாநில போலீஸ் என்றால் பாதுகாப்பில் அலட்சியம் இருக்கும் என தமிழக போலீசார் இங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே இங்கு நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் தலா ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது.ஈஷ்வர் சிப்பி என்ற பயங்கர குற்றவாளி தலைமையில் ஒரு கும்பலும், அனில் சவுத்ரி என்பவன் தலைமையில் மற்றொரு கும்பலும் திகார் சிறையில் இயங்கி வந்தது. இதில் அனிலின் நெருங்கிய நண்பன் ஒருவரை ஈஷ்வர் கும்பல் கடந்த ஆண்டு சிறையில் வைத்து தீர்த்து கட்டியது. இதனால் ஈஷ்வரை பழிவாங்க அனில் துடித்துக் கொண்டிருந்தான். இரண்டு கும்பலுக்கும் உள்ள விரோதத்தால் இவர்களை தனித்தனி வார்டுகளில் காவலர்கள் அடைத்து வைத்திருந்தனர். நேற்று மதியம் ஈஷ்வருக்கு கண்ணில் வலி ஏற்பட்டது.
இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனகைகு காவலர்கள் அவனை அழைத்து வந்தனர். ஈஷ்வருடன் அவனது கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் துணையாக இருந்தனர். சிகிச்சை முடிந்து தனது வார்டுக்கு ஈஷ்வர் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அனில் கும்பல் தங்கள் சிறை வார்டனை அடித்து உதைத்து கதவை திறந்து கொண்டு ஈஷ்வர் மீது பாய்ந்தது. இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடும் சண்டை மூண்டது. டீஸ்பூன், பிரஷ் ஆகியவற்றை கூராக தீட்டி அவற்றை ஆயுதங்களாக மாற்றி இரு தரப்பு கடுமையாக தாக்கிக் கொண்டது. அவர்களை தடுக்க துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவலர்கள் முயன்றனர். சண்டை நடப்பதை அறிந்து கூடுதல் காவலர்கள் அங்கு விரைந்தனர்.
அரை மணி நேர போராட்டதுக்கு பின்னர் அங்கு சண்டை ஓய்ந்தது. ஈஷ்வரும், அனிலும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் உடனடியாக சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இரு கும்பலை சேர்ந்த4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. கண்காணிப்பாளர் மற்றும் ஒரு காவலருக்கும் காயம் ஏற்பட்டது. கைதிகள் இறந்த சம்பவம் அவர்களது உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை சிறைக்கு முன் திரண்ட உறவினர்கள் சிறை காவலருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை தொடர்பாக டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.