காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி டெல்டாவில் நாளை கடையடைப்பு: பஸ், ரயில் மறியல்
9/28/2015 2:34:52 PM
தஞ்சை: கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பொருளாதாரமே முடங்கிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீரை பெற்றுத் தர வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தமிழக அரசு கடிதம் எழுதுவதைத் தவிர கர்நாடக, மத்திய அரசுகளை நிர்ப்பந்திக்கும் வகையில் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே இதை கண்டித்தும், கருகும் பயிரை காப்பாற்ற கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வலியுறுத்தியும், தமிழக அரசு காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நாளை (29ம் தேதி) தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல், 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு மதிமுக மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணத்தில் ரயில் மறியலும், மேலும் 30 இடங்களில் பஸ் மறியலும் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். இதேபோல் நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பஸ், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறுகின்றனர். இதற்கிடையே டெல்லியில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில தலைமை செயலாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடகா தரவேண்டிய தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும். காவிரி மேலாண் வாரியம் உடனே அமைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் கலந்து கொளளும் அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.100 விவசாயிகள் கைது காவிரி நீர் மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும். காவிரி நீர் பங்கீட்டு குழு அமைக்க வேண்டும் என்று இன்று காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சேரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பனங்குடி பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை விளக்கி கோஷங்கங்கள் எழுப்பினர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.