காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: அதிமுக நகராட்சி தலைவர் கார் மோதி 3 பேர் பலி
9/28/2015 2:32:02 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பைக் மீது குடியாத்தம் நகராட்சி தலைவரின் கார் மோதியதில் 2 வாலிபர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். தப்பிய கார் டிரைவரை போலீசார் தேடுகின்றனர். சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் லோகேஷ் (24). ரெட்டேரியை சேர்ந்தவர் சீனிவாசன்(25). நண்பர்கள் இருவரும் நேற்று மாலை வேலை நிமித்தமாக வேலூர் நோக்கி புறப்பட்டனர். லோகேஷுக்கு சொந்தமான பைக்கில் இருவரும் சென்றனர். இரவு 9 மணி அளவில் காஞ்சிபுரம் ஏனாத்தூர் அருகே செல்லும் போது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். முதியவர் மீது மோதாமல் இருக்க லோகேஷ் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் பின்னால் அதிவேகத்தில் வந்த குடியாத்தம் நகராட்சி தலைவர் அமுதா சிவபிரகாசத்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது பயங்கரமாக ேமாதியது. சாலையை கடக்க முயன்ற முதியவர் மீதும் மோதி நின்றது. இதில் லோகேஷ், சீனிவாசன் மற்றும் சாலையை கடக்க முயன்ற முதியவர் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காரை சாலையில் நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பினார். நகராட்சி தலைவர் அமுதா சிவபிரகாசம் அதிமுகவை சேர்ந்தவர்.
இந்த கார் சென்னையில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்படி காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சாரதி, எஸ்ஐ கண்ணன், போலீசார் சம்பவ இடத்துக்கு விரந்தனர். பின்னர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தப்பிய கார் டிரைவரை தேடுகின்றனர். இறந்த முதியவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இறந்த முதியவர் காஞ்சிபுரம் அடுத்த நெல்லூர் கிராமத்தை சேர்ந்த தனபால்(66), விவசாயி என்பது தெரிந்தது.