மதுரை அருகே கோயிலில் ருத்ராட்ச மரம் கண்டுபிடிப்பு
9/28/2015 2:19:29 PM
திருப்புவனம்: மதுரை அருகே குன்னத்தூரில் உள்ள கோயிலில் ருத்ராட்ச மரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி கேள்விப்பட்டதும் ஏராளமான மக்கள் வந்து மரத்தை வணங்கி செல்கின்றனர். மதுரை அருகே வரிச்சியூரில் இருந்து சக்குடி கிராமம் செல்லும் வழியில் குன்னத்தூர் கிராமம் உள்ளது. இங்கு தொல்லியல் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அஸ்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. குடவறை கோயிலான இக்கோயில் மேற்கு நோக்கி உள்ளதால் அஸ்தகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.கிபி 8ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயிலில் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். குன்னத்தூரை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட மலைகள் உள்ளன.
கோயிலில் கருவறை மற்றும் முன்புறம் மண்டபம் அமைந்துள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் 5க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மரங்களை பற்றி யாருக்கும் எந்த விபரம் தெரியவில்லை.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மரங்களில் காய் காய்க்க ஆரம்பித்தது. என்ன காய் என தெரியாமல் மக்கள் தவித்தனர். அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர் இது ருத்ராட்ச மரம் என்றும், அதிலுள்ள காய் ருத்ராட்சம் என்றும், நேபாள நாட்டில்தான் இந்த மரம் அதிகளவில் உள்ளது, தமிழகத்தில் எப்படி வளர்ந்து காய்த்தது என்றும் தெரியவில்லை’ என்றார்.
இந்த தகவல் பரவியதால் ஏராளமான மக்கள் வந்து மரத்தை வணங்கினர். காய்களை பறித்து சென்றனர். தற்போது மரத்தில் ஓரு சில ருத்ராட்ச காய்களை உள்ளது.‘ருத்ராட்ச மரம் உள்ளதால் கோயில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மரங்களை பற்றி ஆய்வு மேற்கொண்டு மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்கள் கூறுகின்றனர்.