மெக்கா நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு: சுஷ்மா சுவராஜ் தகவல்
9/28/2015 2:17:57 PM
மெக்கா: மெக்காவில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சவுதியில் உள்ள மெக்காவில் பக்ரீத் பண்டிகையையொட்டி உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இங்கு கடந்த வாரம் மினா நகரில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 769 பேர் உயிரிழந்தனர்.
934 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் இந்தியர்களும் பலியானதாக தகவல்கள் வெளியாகின. பலியான இந்தியர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பலியான இந்தியர்கள் பலரின் அடையாளம் தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இந்தாண்டு இந்தியாவில் இருந்து 1.50 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.