தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வீட்டுக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு
9/26/2015 12:30:51 PM
கடலூர்: டிஎஸ்பி விஷ்ணுபிரியாவை நெருக்கடிகளும், மிரட்டல்களும் சூழ்ந்திருந்தன. இதில் எஸ்பியுடன் சேர்த்து அமைச்சரின் உதவியாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று அவரது தந்தை ரவி கூறி உள்ளார். இந்நிலையில், சேலத்தில் இருந்து விஷ்ணுபிரியா வீட்டுக்கு வந்துள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா(27)வின் மரணம் குறித்து சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் (24ம்தேதி) அவர்கள் கடலூர் கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியாவின் வீட்டில் காலை 9.35 மணி முதல் 12.45 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் 25ம்தேதி (நேற்று) விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டுச் சென்றனர். ஆனால், நேற்று மாலை வரை சி.பி.சி.ஐ.டி குழுவினர் விசாரணை நடத்த வரவில்லை.
இதுதொடர்பாக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி கூறியதாவது: சி.பி.சி.ஐ.டி குழுவினர் என்னிடம் இது வரை விசாரணை நடத்தவில்லை. விசாரணை நடத்தினால் எனக்கு கிடைத்த தகவல்களையும் சந்தேகங்களையும் அவர்களிடம் தெரிவிப்பேன்.சி.பி.ஐ விசாரணை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எஸ்.பி யோடு சேர்த்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் ரத்த உறவுகளையும் விசாரிக்க வேண்டும். உரியமுறையில் விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மைகள் வெளிவரும். மகள் உயிரிழந்த அன்று (18ம் தேதி) பிற்பகலில் எஸ்.பி யிடமிருந்து போன் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரின் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது
பகல் 2.38 மணியிலிருந்து 5 மணி வரையில் அவரது செல்போனில் நடந்த உரையாடலை கைப்பற்றி விசாரித்தாலே இறப்பிற்கான காரணம் தெரிந்து விடும். விஷ்ணுபிரியா, தான் விசாரித்து வந்த கொலை வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தியுள்ளார். அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.மேலும், திருச்செங்கோடு பகுதியில் 1 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக தடுத்ததாலும் இவர் மீது பலர் ஆத்திரத்தில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே, இதில் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
சிபிசிஐடி போலீஸார் எனது மகள் எழுதியதாகக் கூறப்படும் 9 பக்க கடிதத்தை காண்பித்தும், சில புகைப்படங்களையும் காண்பித்து விளக்கம் கேட்டனர். அதில், 2 பக்கம் மட்டுமே விஷ்ணுபிரியாவின் கையெழுத்து மற்றவை அவரது கையெழுத்து இல்லை என்று கூறிவிட்டோம். மர்மநபர்கள் அவரிடம் பெற்றோரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டியிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். ஏனென்றால் தன்னுடன் தங்கியிருந்த தாயாரை அவசர அவசரமாக அவர் இறந்து போவதற்கு முதல்நாள் கடலூர் கோண்டூரில் உள்ள வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். நெருக்கடிகள், மிரட்டல்கள் என் மகளை சூழ்ந்திருந்தன. எனவே மகளின் மரணத்தில் உள்ள உண்மையை கண்டறிய வேண்டும் என்றார்.
மர்ம கடிதம் இந்நிலையில், கடலூர் கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியாவின் வீ்ட்டிற்கு சேலத்திலிருந்து நேற்று வந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் (லேட்) டி.எஸ்.பி விஷ்ணுபிரியா, கோண்டூர், கடலூர் என்ற முகவரியோடு சேலத்திலிருந்து அந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.அக்கடிதத்தில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே மீண்டும் பிரேதப்பரிசோதனை நடத்தப்பட வேண்டும். உண்மை குற்றவாளிகளை தப்புவிக்க சதி நடைபெறுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.