நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி
9/5/2025 12:52:31 PM
கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அடர்ந்த காடு போல் நிறைந்துள்ள முட்புதர்களால் அப்பள்ளி மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்துள்ளன.இந்த முள்புதர்களில் ஏராளமான பாம்புகள் உலா வருகின்றன. பாம்பினால் ஏற்படும் ஆபத்தை உணராமல், அப்பகுதியில் மாணவிகள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில், பள்ளியை ஒட்டி காந்தி நகர் செல்லும் சாலையோரம் செல்லும் சுற்றுச்சுவர் மீது நேற்று காலை ஊர்ந்து சென்ற 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி வளாகத்தை சுற்றிலும் ஏராளமான அடர்ந்த முட்புதர் காடுகளும் பாம்புகளும் உள்ளன. இதனால் மாணவிகளுக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம். மேலும், சுற்றுச்சுவரில் சில சமூகவிரோதிகள் ஏறி பள்ளிக்குள் குதித்து மது குடித்து வருகின்றனர்.மேலும், காந்திநகர் செல்லும் சிமெண்ட் சாலையை ஒட்டிய பள்ளி கட்டிடங்கள் மீது மரக்கிளைகள் சாய்ந்தபடி உள்ளது. இதனால் வகுப்பறைக்குள் பாம்புகள் எப்போது நுழையுமோ என்ற அச்சத்தில் மாணவிகள் உள்ளனர்.இப்பள்ளியில் அடர்ந்து காணப்படும் முட்புதர்களை அகற்றி, அங்கு மாணவிகள் விளையாடுவதற்கும், அவர்கள் கொண்டு வரும் சைக்கிள்களை நிறுத்துவதற்கும் பள்ளி நிர்வாகம் இடத்தை தேர்வு செய்ய, சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.