அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு
9/5/2025 12:51:51 PM
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி, தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏறத்தாழ 190 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 55 சதவிகிதம் அதிகரித்து, இந்தியாவில் மூன்றாவது இடத்திற்கும், குழந்தைகளை கொலை செய்வதில் நான்காவது இடத்திற்கும் தமிழகம் முன்னேறி இருப்பதாகவும் தெரியவருகிறது. இதுதான் அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றமா? குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் 2011ஆம் ஆண்டில் 925 ஆக இருந்தது. முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் எண்ணிக்கையில் பெருகி தற்போது 2014ஆம் ஆண்டில் 2,354 ஆக உயர்ந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க ஆட்சியாளர்களோ, பொய்யும், புரட்டும் பேசி, குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருப்பதைப்போன்ற ஒரு மாய தோற்றத்தை வெற்று அறிவிப்புகள் மூலம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், பாலியல் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக, குற்றங்களை குறைப்பதற்கு, அதிமுக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களின் நலன் குறித்து கவலைப்படாமலும் மது விற்பனையின் மூலம் அரசுக்கும், தங்களுக்கும் கிடைக்கும் வருமானம் குறித்து மட்டுமே கவலைப்படும் இந்த அதிமுக ஆட்சிக்கு, உரிய நேரத்தில் தக்க பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என்பது நிச்சயம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.