தைலாவரத்தில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் போதை ஆசாமியால் விபரீதம்
9/5/2025 12:47:56 PM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் போதையில் ரோட்டில் உருண்டு சென்ற போதை ஆசாமியைப் பார்த்துக் கொண்டே கார் டிரைவர் ஓட்டி சென்றதால், அந்த கார் 20 அடி பள்ளத்தில் வேகமாகப் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை, கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம், ஜிஎஸ்டி சாலையோரத்தில் நேற்று மதியம் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் போதையில் உருண்டு கொண்டிருந்தார்.அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னையை நோக்கி சென்ற காரில், ஒரு பெண் உட்பட 4 பேர் பயணம் செய்தனர். அந்த காரை ஓட்டி சென்ற டிரைவர், சாலையோரம் போதை ஆசாமி உருண்டு கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே காரை ஓட்டி சென்றார்.இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்திலிருந்த 20 அடி பள்ளத்தில் கார் வேகமாகப் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 4 பேரும் படுகாயத்துடன் அலறி துடித்தனர். இதைக் கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து, காரில் இருந்த 4 பேரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தினால், ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பக்கமும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.