கர்நாடகாவில் 8 மாதங்களில் 400 விவசாயிகள் தற்கொலை : முதல்வர் சித்தராமைய்யா அதிர்ச்சி தகவல்
9/2/2025 3:12:27 PM
பெங்களூரூ: கர்நாடகாவில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதல்வர் சித்தராமைய்யா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.பெங்களூரூவில் நேற்று மண்டல கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமைய்யா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனதைது நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 2013-14ம் ஆண்டில் 58 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014-15ல் 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நடப்பு ஆண்டில் ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெரும்பாலும் விவசாயிகள் தற்கொலைக்கு கந்து வட்டிக்காரர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கந்து வட்டிகாரர்களை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டு–்ம் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.