மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு : பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை
9/2/2025 1:52:02 PM
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.தொழிலாளர் நல சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளதை எதிர்த்து நாடு முழுவதும் தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தம் இன்று நடை்பெற்று வருகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் கூடியது. ஏற்கனவே ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாகவும் மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது. இந்த சூழலில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பருப்பு இறக்குமதியில் ஈடுபடும் பொதுத்துறை நிறுவனங்கள் 15 சதவீத தொகையை மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதி அளிப்பது தொடர்பாகவும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் தேடும் பணிகளில் தனியாரை அனுமதிப்பது தொடர்பாகவும் மத்திய அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி இல்லத்தில் கூடிய மத்திய அமைச்சரவை இதுகுறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய மாநாட்டு கட்சியின் தொழிற் சங்க தலைவர் சுபாஷ் சாஸ்திரி, பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், கடந்த ஜூலையில் இருந்து நிலுவையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்காக 7 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு வழங்க வேண்டும். தற்போது அதிகரித்துள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.