கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
8/22/2015 11:53:00 AM
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ. ஆரம்பப் பள்ளியை கல்வித்துறை மூடியது. அதேபோல், அங்கு பல ஆண்டுகளாக இயங்கி வந்த ரேஷன் கடையும் 6 கி.மீ., தொலைவில் உள்ள மற்றொரு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், கோடநாடு பகுதிகளில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோடநாடு தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், அப்பாவி மக்களுக்கு எதிராகவும் செயல்படும் கல்வித்துறை, பொது விநியோகத்துறையையும் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து நேற்று கோடநாடு எஸ்டேட் முன் மாவட்ட திமுக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நீலகிரி மாவட்ட திமுக., அறிவித்திருந்தது. ஆனால், கோடநாடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த ேபாலீசார் அனுமதியளிக்கவில்லை.இதனால், நேற்று கோத்தகிரி மார்க்கெட் எதிரே உள்ள மைதானத்தில் மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், மாவட்ட அவைத்தலைவர் பில்லன், தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், தமிழ்ச்செல்வன், கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.