கஞ்சா வாங்கி வராததால் ஆத்திரம் மயிலாப்பூரில் சிறுவன் அடித்து கொலை : சிறுவர்கள் 2 பேர் சிக்கினர்
8/21/2015 3:21:11 PM
சென்னை: கஞ்சா வாங்கி வராததால் 7 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதுசம்பந்தமாக 2 சிறுவர்கள் சிக்கினர்.சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவரது 7 வயது மகன் லோகேஷ். 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை 6 மணிக்கு வெளியே சென்றவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தனர். சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஷியாம் வின்சென்ட் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்நிலையில், நேற்று இரவு சதீஸ் வீட்டு அருகே உள்ள கழிவறையில் லோகேஷ் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்று லோகேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லோகேசின் பின்னந் தலையில் காயம் இருந்தது. கயிறு மூலம் கழுத்தும் இறுக்கப்பட்டுள்ளது. எனவே, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி இன்றும் மீண்டும் விசாரணை தொடங்கியது.இதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிறுவன் கொலை நடந்த அன்று 2 பேரும் லோகேசிடம் பணம் கொடுத்து கஞ்சா வாங்கி வரச்சொல்லி உள்ளனர். இதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளான். அத்துடன் இதுகுறித்து தனது பாட்டியிடம் கூறியுள்ளான். இதனால், விரக்தி அடைந்த 2 பேரும் சேர்ந்து லோகேசை அடித்து கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.இதில் சம்பந்தப்பட்ட 2 சிறுவர்கள் சிக்கி உள்ளனர். ஒரு சிறுவனை தேடி வருகின்றனர்.