வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்
8/21/2015 2:27:25 PM
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சல்மான்பட், வேகப்பந்துவீச்சாளர்கள் ஆசிப், அமீர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐசிசி 5 ஆண்டு தடை விதித்தது. இந்த தடை வரும் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. செப்.1ம் தேதிக்கு பின் அவர்கள் கிரிக்கெட் விளையாடலாம் என ஐசிசி அறிவித்துள்ளது. இது பற்றி சல்மான்பட் கூறியதாவது: எனது கிரிக்கெட் வாழ்வில் வீணாகி போன சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது. நான் மறுபிரவேசம் செய்ய மற்றொரு வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி. சில நேரங்களில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாக். கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இனி உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். பாக். அணியில் இடம் பெற சிறிது காலம் ஆகலாம். அது நடக்காமல் கூட போகலாம். கடந்த 5 ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நிறைய கற்றுக் கொண்டேன். நான் மீண்டும் கிரிக்கெட்டில் உச்சநிலையை அடைவேன் என்பதை உறுதியாக சொல்வேன். நல்ல கிரிக்கெட் வீரராக ஒரே நாளில் மீண்டும் மாறி விடமுடியாது. அதற்கு சிறிது காலம் ஆகலாம் எனக் கூறி உள்ளார்.