நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு
8/21/2015 2:12:06 PM
கூடுவாஞ்சேரி: சென்னை அருகே நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் இயக்குனருமான முத்துமீனாள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர். அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவைகளை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் உள்நோயாளிகள் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.இதன்பிறகு மாவட்ட திட்ட இயக்குநர் முத்துமீனாள் கூறியதாவது:தமிழ்நாட்டிலேயே நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் அதிக அளவில் பிரசவம் நடக்கிறது. கலெக்டரின் உத்தரவின்பேரில், 2015-2016-ம் ஆண்டின் சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்கீழ் இங்கு ரூ. 7.30 லட்சம் மதிப்பில் ஜெனரேட்டர், அறுவை சிகிச்சை அரங்கு, மின்விளக்கு வசதிகள், கொதிநீர் உலர்கலன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பிரசவ அறுவை சிகிச்சைக்கு 2 டேபிள் உட்பட ரூ. 10லட்சத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு நிதி ஒதுக்கும்படி டாக்டர்கள் விடுத்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இங்கேயே நாய்க்கடிக்கு ஊசி போட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.இவ்வாறு முத்துமீனாள் கூறினார்.இந்த ஆய்வின்போது காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோகன், பொறியாளர்கள் வசுமதி, சுசித்ரா உள்பட பலர் இருந்தனர்.