இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா
8/19/2015 3:32:00 PM
கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா பரிதாபமாக தோல்வி கண்ட நிலையில், 2வது டெஸ்ட் கொழும்புவில் நாளை தொடங்குகிறது. இந்திய அணி கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் லாட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட்டில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் இங்கியுடன் நடந்த 3 டெஸ்ட்டிலும் தோல்வி கண்டது. ஆஸி.யில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய 4 டெஸ்ட்டில் 2 போட்டி டிராவில் முடிய 2ல் தோல்வி கண்டது. வங்கதேசத்துடன் ஒரே ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. இலங்கையுடன் முதல் டெஸ்ட்டில் தோல்வி கண்டுள்ளது. இந்தியா டெஸ்ட்டில் வெற்றிபெற்று ஒரு ஆண்டு கடந்து விட்டது. இதனால் கட்டாய வெற்றி ஏக்கத்துடன் இந்தியா நாளை களம் இறங்குகிறது. முரளி விஜயுடன், ராகுல் துவக்க வீரராக களம் இறங்குகிறார். மேலும் ரோகித் சர்மாவுக்கு பதில் புஜாராவும், ஹர்பஜன் சிங்கிற்கு பதில் பின்னியும் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. அதே நேரத்தில் இந்த டெஸ்ட்டுடன் ஓய்வு பெறும் சங்ககராவை வெற்றியுடன் வழிஅனுப்பும் உத்வேகத்துடன் இலங்கை களம் இறங்குகிறது.