சாட்சி சொல்லாத மாடுகள்
7/24/2015 2:02:15 PM
மோசடிகளுக்குப் பல ரூபங்கள். தங்களிடம் பறிமுதல் செய்யப்படும் மாடுகள் மாயமாகியிருப்பதாகவும், விற்கப்படுவதாகவும் கால்நடை வியாபாரிகள் கொதித்தெழுந்துள்ளனர்.பொள்ளாச்சி, மணப்பாறை, ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 130 கால்நடைச்சந்தைகள் செயல்படுகின்றன. மாடுகள் அதிகளவில் விற்கப்படுகின்றன. விவசாயத்துக்கு உயிர் கொடுக்கும் தொழிலாக கால்நடை வளர்ப்புத்தான் இன்னும் இருக்கிறது. பொருளாதாரச் சூழலைப் பொறுத்து, மாடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் கால்நடைச்சந்தைகளைத் தான் விவசாயிகள் நாடுகின்றனர்.இதேபோல், தமிழக விவசாயிகள் மட்டுமல்லாது, வெளிமாநில விவசாயிகளுக்கும் மாடுகளை விற்கவும், வாங்குவதற்கும் சந்தைகள்தான் ஆதாரம்.வியாபாரிகள் தாங்கள் விற்கப்போகும் அல்லது வாங்கிய மாடுகளை வாகனங்களில் கொண்டுசெல்லும்போதுதான் பிரச்னை உருவாகிறது. வாகனங்களில் அளவுக்கதிகமாக வாயில்லா ஜீவன்களை அடைத்துச் செல்வதாகவும், இது ஜீவ காருண்யத்துக்கு எதிரான செயல் என்றும் புகார் கூறப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். இவ்வாறு ஏற்றிச்செல்லும் வாகனங்களை வழிமறித்து, விலங்குகள் நல அமைப்பினர் உள்ளிட்டோர் காவல்நிலையத்தில் மாடுகளோடு வாகனங்களை ஒப்படைக்கின்றனர்.
போலீசார் மாடுகளை அருகில் உள்ள கோசாலைகளில் விடுகின்றனர். பறிமுதல் செய்யப்படும் மாடுகளைத் திரும்பப் பெறுவதற்காக நீதிமன்றங்களில் முறையிட்டு, அதற்கான உத்தரவை வியாபாரிகள் பெற வேண்டியிருக்கிறது. அவ்வாறு உத்தரவைப் பெற்ற பின்பும், மாடுகளைப் பெற முடிவதில்லை என்பது வியாபாரிகளின் குற்றச்சாட்டு.‘மாடு பறிமுதல் நடவடிக்கை தொடர்வதால் போலி கோ சாலைகள் உருவாக்கப்படுகின்றன. மாடுகள் வெளிச்சந்தையில் முறைகேடாக விற்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் செயல்படும் கோ சாலை நிர்வாகி, 14 லாரிகளில் ஏற்றப்பட்டு வந்த மாடுகளைப் பெற்றுச் சென்றார். நீதிமன்ற உத்தரவுப்படி மாடுகளைப் பார்க்கச் சென்றபோது, அங்கு சில மாடுகளைத் தவிர பிற மாடுகள் விற்கப்பட்டிருக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ளோம். விற்கப்படும் மாடுகள் இறந்ததாகக் கணக்குக் காட்டப்படுகின்றன.
இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான மாடுகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை’ என்று தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதுகாப்புச்சங்கத்தினர் கோவை கலெக்டரிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். மாடுகள் பறிமுதல் நடவடிக்கை தொடரும் நிலையில், மாட்டுச்சந்தைகளை வியாபாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால், வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, கால்நடை வளர்ப்போரும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். வாயில்லா ஜீவன்கள் சாட்சி சொல்லப்போவதில்லை என்ற தைரியத்தில் ‘ஜீவ காருண்ய’ வேடதாரிகள் பிழைப்பு நடத்துகின்றனர். இது மகா கேவலம்!