431 பேரை பலி கொண்ட சீன கப்பல் விபத்து குறித்த விசாரணை தொடங்கியது
6/11/2025 2:44:02 PM
பெய்ஜிங்: சீனாவில் கப்பல் கவிழ்ந்து 431 பேர் உயிரிழந்த விபத்து குறித்த விசாரணை தொடங்கியது. வானிலை, விபத்துக்குள்ளான கப்பலின் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.சீனாவில் கடந்த வாரம் யங்சே ஆற்றில் சென்று கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. ஊழியர்கள் உட்பட 456 பேர் இந்த கப்பலில் பயணம் செய்தனர். கப்பல் மூழ்கியதால் பெரும்பாலானோர் கப்பலின் அடியில் சிக்கிக் கொண்டனர். கப்பல் கேப்டன், தலைமை பொறியாளர் உட்பட 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.சுமார் ஒருவார போராட்டத்துக்குபின் 431 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 50 வயதை கடந்தவர்கள். அதிகம்பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தீவிர விசாரணைக்கு சீன அரசு உத்தரவிட்டது. கப்பல் விபத்துக்குள்ளானது பற்றி விசாரணை நடத்த 60 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விபத்து நடந்த சமயத்தில் வானிலையின் தன்மை, கப்பல் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தனித்தனி குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. கப்பல் விபத்துக்குள்ளான சமயத்தில், கப்பலின் கேப்டன், தலைமை பொறியாளர் ஆகியோர் தப்பி வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.எனவே, இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, கப்பல் நிறுவனம், கப்பலை தயாரித்த நிறுவனம், வடிவமைப்பாளர்கள் மற்றும் தப்பி வந்த பயணிகள் உள்ளிட்டோரிடமும் விசாரிக்கின்றனர். மேலும், விபத்தின்போது இருந்த வானிலை, ஆற்று மணலின் தன்மை போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான கப்பலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை மீட்பு படையினர் கைப்பற்றியுள்ள நிலையில், அவைகளை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. சூறைக்காற்று வீசியதே கப்பல் கவிழ்ந்ததற்கு காரணம் என கூறப்படும் நிலையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கப்பல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து முழுவிசாரணைக்கு பின்னரே தெரியவரும்.