டாஸ்மாக் கடை அகற்றாதது ஏன்? புதுகை கலெக்டர் பதில் சொல்ல வேண்டும் : மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி ஆவேசம்
5/16/2015 12:46:23 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட் டம், குளத்தூர் அடுத்த ராசாப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதை அகற்றக் கோரி அவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் சார்பில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் உள்ளிட்ட 600 பேர் கைதாயினர். அப்போது இக்கடையை உறுதியாக அகற்றுவதாக கூறிய அதிகாரிகள் கடையை அகற்றவில்லை.
இதை தொடர்ந்து, திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, நேற்று ஒட்டுமொத்த கிராம மக்களும் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால், கீரனூர் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, டாஸ்மாக் கடையும் திறக்கப்படவில்லை.இதற்கிடையே மழை தொடர்ந்து பெய்தது. ஆனாலும், போராட்டக்காரர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எம்எல்ஏ பாலபாரதி, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சின்னத்துரை, கவிவர்மன் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
வரும் ஜூன் 15ம் தேதிக்குள் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.எம்எல்ஏ பாலபாரதி கூறுகையில், ‘‘இந்த மறியல் போராட்டத்தில் ஒட்டுமொத்த கிராம மக்களே இறங்கியுள்ளது அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்துகிறது. இந்த கடை முன்பாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பல்வேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. விதிமுறைகளை மீறி இயங்கும் இந்த கடையை அகற்றும் விஷயத்தில் அதிகாரிகள் ஏன் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர் என்பது வியப்பாக உள்ளது. இதற்கு கலெக்டர் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும்’’ என்றார்.