தற்கொலை செய்த வீராங்கனை அரசு வேலையை ஏற்க தாய் மறுப்பு
5/16/2015 12:38:54 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள சாய் நீர்விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 4 தேசிய துடுப்புப் படகு வீராங்கனைகள் விஷக்காய் தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதில் அபர்ணா என்ற வீராங்கனை சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 3 வீராங்கனைகளுக்கும் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனியர் வீராங்கனைகள் ராகிங் செய்தது தான் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் என்று அபர்ணாவின் தாய் கீதா ராமபத்ரன் கூறினார். இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கேரள குற்றப்பிரிவு போலீசாரும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்த அபர்ணாவின் குடும்பத்திற்கு சாய் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது. மேலும் அபர்ணாவின் தாய் கீதா ராமபத்ரனுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் சாய் இயக்குனர் ஜெனரல் இன்ஜெதி னிவாஸ் அறிவித்தார். ஆனால் அரசு வேலை தனக்கு தேவையில்லை என்று அபர்ணாவின் தாய் கீதா ராமபத்ரன் கூறியுள்ளார். இதுபற்றி ராமபத்ரன் கூறுகையில், மகளின் மரணத்துக்கு காரணமான சீனியர் வீராங்கனைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற முயற்சிப்பதால் சாய் அறிவித்துள்ள அரசு வேலை எனக்கு தேவையில்லை. என்றார்.