சித்தாமூர் ஒன்றியத்தில் முழுவீச்சில் சுகாதார திட்டப் பணிகள்
5/16/2015 12:32:43 PM
மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்து சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இங்கு தற்போது முழு சுகாதார திட்ட பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 ஊராட்சிகளான சூணாம்பேடு, மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், கீழ்மருவத்தூர், பெருங்கரணை, சித்தாமூர், கொளம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது.இந்த ஊராட்சிகளை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள 45 சுகாதார காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான கையுறைகள், கோட், தொப்பி, துப்புரவு பணிகளுக்குத் தேவையான கூடை, துடைப்பம் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டு உள்ளன.
இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் 150 குடும்பத்தினர் தரும் குப்பைகளை சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வண்டிகள் மூலம் கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்காத குப்பைகளை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்த இவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.ஊராட்சிகளில் வெட்டப்பட்டுள்ள குழிகளில் மக்கும் குப்பைகளை நிரப்பி மக்கச்செய்து, விவசாயத்துக்கு எருவாக பயன்படுத்தவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை அவர்கள் சிறப்பாக மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊராட்சி தோறும் அடிக்கடி சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.