டெல்டாவில் ஒரு வாரமாக அடை மழை : 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் : கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம்
5/16/2015 12:27:55 PM
திருச்சி: டெல்டாவில் தொடர்ந்து அடைமழை பெய்துவருகிறது. திருவாரூர், குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள குளம், குட்டைகளும் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய 3 ஒன்றியங்கள் முழுமையாகவும், குடவாசல் மற்றும் நன்னிலம் ஆகிய 2 ஒன்றியங்களில் ஒரு பகுதியும் என மொத்தம் 5 ஒன்றியங்களில் கோடை சாகுபடியாக 48,000 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழை இந்த பயிர்களுக்கு ஏற்றது என்ற போதிலும் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் நிலத்தில் சாய்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் 8,750 ஏக்கரில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மழை காரணமாக பருத்தி பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதேபோல் கோடை சாகுபடி பயிராக பயிரிடப்பட்டுள்ள வேர்கடலை, எள் போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. 2,000 ஹெக்டேருக்கு மேல் விவசாயிகள் எள் சாகுபடி செய்திருந்தனர். எள் சாகுபடிக்கு மிதமான மழை பெய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் ஒரு வாரமாக கனமழை பெய்துவருவதால் எள் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பட்டங்களில் சாகுபடி செய்திருந்த எள் அனைத்தும் அழுகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேதாரண்யத்தில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 5வது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது.
பெரம்பலூரில் நேற்று பலத்த மழை பெய்தது. இன்று அவ்வப்போது மழை பெய்தது. அரியலூரிலும் மழை பெய்து வருகிறது.திருச்சியில் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி கூறுகையில்: தஞ்சை மாவட்டத்தில் 45ஆயிரம் ஹெக்டேரில் பம்ப்ஷெட் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 10சதவீதம் கூட அறுவடைக்கு வரவில்லை. இந்நிலையில் தொடர் மழை பெய்து வருதால் கதிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. தஞ்சையில் 25ஆயிரம் ஏக்கர் பருத்தி அழுகும் அபாயம் உள்ளது. இதேபோல் டெல்டா முழுவதும் 50ஆயிரம் ஏக்கர் பருத்தி, எள், உளுந்து பயிர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளதால் கோடி கணக்கில் நஷ்டம் என விவசாயிகள் கவலையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உடனடியாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.
2 ெபண்கள் பலிமயிலாடுதுறை அருகே உள்ள தேரிழந்தூர் மேலையூரைச் சேர்ந்த ஜான்டேவிட் மனைவி விக்டோரியாவின்(70) வீட்டின் சுவர் தொடர் மழையால் இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த விக்டோரியா படுகாயமடைந்தார். மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மழையால் குளித்தலை வட்டம், இனுங்கூர் அருகே இ.புதூரை சேர்ந்த முருகன் மனைவி வசந்தா(45) ஆட்டை வேறிடத்தில் கட்டுவதற்கு வெளியில் வந்தபோது இடி தாக்கியது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.