பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யுமா ஜிம்பாப்வே அணி?
5/15/2015 2:40:35 PM
ஹராரே: பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்று ஜிம்பாப்வே வாரியம் கூறியுள்ள நிலையில், ஜிம்பாப்வே அணியின் பாக். சுற்றுப்பயணம் நிச்சயமற்றதாக மாறியுள்ளது. 2008ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணம் மேற்கொண்ட பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். 8 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பி்ன்னர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த நாடும் முன்வரவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான பாகிஸ்தான் வாரியம், ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற நாடுகளை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருமாறு கெஞ்சி வருகிறது. கணிசமான தொகை தருவதாக கூறியதை அடுத்து ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஒப்புக் கொண்டது. இந்த மாத இறுதியில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் வரும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக விளையாட்டு மற்றும் கேளிக்கை கமிஷனின் அறிவுரைப்படி பாகிஸ்தானில் ஜிம்பாப்வே அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஜிம்பாப்வே தரப்பிடம் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதை அடுத்து அடுத்த 16 நிமிடங்களில் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது ஜிம்பாப்வே வாரியம். அதில், ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், ஜிம்பாப்வே அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இப்போதைக்கு ரத்து செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் இந்த பிரச்னை பற்றி ஆலோசித்து வருவதாக ஜிம்பாப்வே வாரிய செய்தித் தொடர்பாளர் லவ்மோர் பாண்டா தெரிவித்தார். ஜிம்பாப்வே வாரியத்தின் மாறுபட்ட அறிக்கைகளால், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.