அமைச்சர் தொகுதியில் ஒரு மாதமாக காத்துக்கிடக்கும் இலவச பொருட்கள்
5/14/2015 2:26:20 PM
தண்டராம்பட்டு: ஒரு மாதத்துக்கு முன்பே வந்த தமிழக அரசின் இலவச பொருட்கள் இதுவரை வழங்கவில்லை. எனவே இவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட வணக்கம்பாடி, மலையனூர்செக்கடி, சாத்தனூர், ராயண்டபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன் இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை ஆன பின்பே இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.
இந்நிலையில் இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர், அதிமுக ஒன்றியக்குழு தலைவர், ஒன்றிய செயலாளர், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் சென்னையில் முகாமிட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படாமல் ஒருமாதமாகவே காத்துக்கிடக்கிறது. இதை தினந்தோறும் பாதுகாக்கும் பணியில் சிரமம் இருப்பதாக கிராம சிப்பந்திகள் கூறுகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அரசின் இலவச பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.