பெண் தொண்டரை ஏமாற்றிய விவகாரம்: மகளிர் ஆணைய சம்மனுக்கு தடை கேட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ ஐகோர்ட்டில் மனு
5/8/2025 2:55:22 PM
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் பெண் தொண்டர் ஒருவருடன் நெருங்கி பழகிவிட்டு அவரை கைவிட்டு விட்டதாக அக்கட்சியின் எம்எல்ஏவும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான குமார் விஸ்வாஸ் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடை விதிக்கக்கோரி விஸ்வாஸ் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் மீது அக்கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். தன்னிடம் நெருங்கி பழகிவிட்டு தற்போது கைவிட்டு விட்டதாக டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க விஸ்வாசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. சம்பந்தப்பட்ட பெண்ணுடன் உறவு இருந்ததை இதுவரை விஸ்வாஸ் மறுக்கவில்லை. ஆனால் மகளிர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமும் அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி கவர்னர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு மகளிர் ஆணைய தலைவர் பர்கா சிங் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் மகளிர் ஆணையத்தின் நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி விஸ்வாஸ் சார்பில் அவரது வக்கீலும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். விஸ்வாஸ் குறித்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் மகளிர் ஆணையத்தில் ஆஜராக தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை எனவும், நோட்டீஸ் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் குமார் விஸ்வாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஒருவர் போலி கல்வி சான்றிதழ் புகாரில் சிக்கியுள்ளார். தற்போது மற்றொரு எம்எல்ஏ பெண் விவகாரத்தில் சிக்கியிருப்பது அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.