சம்பள உயர்வு கோரி ஆந்திரா, தெலங்கானாவில் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : 3வது நாளாக மக்கள் தவிப்பு
5/8/2025 2:54:56 PM
ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 43 சதவீத ஊதிய உயர்வு கோரி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆந்திர பிரதேச சாலை போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் கடந்த புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 43 சதவீத ஊதிய உயர்வு கோரி இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் பஸ்கள் இயங்கவில்லை என கூறப்படுகிறது. வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இருமாநில அரசுகள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என அரசு எச்சரித்துள்ளது. தனியார் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை வைத்து சில பஸ்களை நிர்வாகம் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. உள்ளூர் வழி தடங்களில் அதிக ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.