இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : டேவிட் கேமரூனுக்கு வெற்றி வாய்ப்பு : இன்று மாலை முடிவு தெரியும்
5/8/2025 2:53:17 PM
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. சுமார் 4.50 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தேர்தல் அமைதியாக முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 2வது முறையாக போட்டியிடும் தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், இரு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதாக தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது.இந்நிலையில், இரு கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்தில் அதிகளவில் வசிக்கும் இந்தியர்களை கவரும் வகையில், பிரதமர் டேவிட் கேமரூன், தொழிலாளர் கட்சியின் தலைவர் எட்மிலிபேன்ட் ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
வருமான வரி வரம்பு குறைக்கப்படும், நாட்டின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார் டேவிட் கேமரூன். இந்நிலையில், நேற்று தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சி முந்துவதாக தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் 316 இடங்களை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பிடிக்கும் என்றும், தொழிலாளர் கட்சிக்கு 239 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில், ஸ்காட்லாந்து தேசிய கட்சி 58 இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதை அடுத்து, யார் வெற்றிபெற போகிறார்கள் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.