போலீஸ் கமிஷனர்-ஐகோர்ட் பதிவாளர் திடீர் ஆலோசனை : ஜெயலலிதா வழக்கில் மே 11ல் தீர்ப்பு? இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்பதால் பரபரப்பு
5/8/2025 2:52:17 PM
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிலான தீர்ப்பு வரும் மே 11ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படலாம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஅதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கும் அதிகமாக 66.64 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவருடன் சேர்ந்து கூட்டுசதி செய்ததாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு தனிநீதிமன்றத்தில் கடந்த 2004 முதல் 2014 வரை 9 ஆண்டுகள் நடந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 100 கோடியே ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 கோடி 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சுப்ரீம் கோர்ட் இவர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சுமார் 22 நாட்கள் ஜெயலலிதா கர்நாடக சிறையில் இருந்தார்இதற்கிடையில் தனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யகோரி ெஜயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அம்மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 5ம் தேதி தொடங்கி மார்ச் 11ம் தேதி வரை 45 நாட்கள் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் விசாரணை நடந்தது. பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இடையில் இவ்வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் நியமனம் செய்ததை எதிர்த்து திமுக பொது செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேல்முறை யீட்டு மனு வழக்கில் அரசு வக்கீலாக பணியாற்றிய பவானி சிங்கை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசின் சார்பில் புதிய சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டார். அவர் அரசின் சார்பில் எழுத்து பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து எந்த நேரத்திலும் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் கடந்த 5 நாட்களாக தீர்ப்பு குறித்து வதந்திகள் மீடியாக்களிலும், சமூக வளைதளங்களிலும் வந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மீடியாக்கள் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழக மக்கள் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் மே 11ம் தேதி வெளியிடப்படும் என்று ஐகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு இன்று மாலை நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனருடன் கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஆலோசனை நடத்தியதாக தெரியவருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்ற பெட்டிங்கில் பலர் ஈடுபட்டுள்ளனர். தீர்ப்பு தேதி தெரிந்துகொள்ள அதிமுக வக்கீல்கள் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.