திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரமம் பள்ளி மாணவிகள் உயிர்வேதியியலில் முதல் இரு இடம் பிடித்து சாதனை
5/7/2025 4:58:59 PM
துரைப்பாக்கம்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. உயிர்வேதியியலை முதன்மை பாடமாக எடுத்து திருவான்மியூர் காமராஜர் நகர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரமம் மெட்ரிக் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 188 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அவர், தமிழ் 157, ஆங்கிலம் 170, இயற்பியல் 136, வேதியியல் 97, உயிரியல் 158 என மொத்தம் 906 மதிப்பெண் பெற்றுள்ளார்.ஜெயஸ்ரீ யின் தந்தை ரமேஷ்பாபு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக பணியாளர். தாய் ராதிகா. ஜெயஸ்ரீ கூறுகையில், ‘ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை தினமும் படித்து விடுவேன்.
எதிர்காலத்தில் மருந்து கண்டுபிடிப்பு படிக்க ஆவலாக உள்ளேன். உயிரியல் வேதியியல் ஆசிரியை ஆஷா மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் மாநிலத்தில் முதலிடம் பிடிக்க முடிந்தது’ என்றார்.இதே பள்ளி மாணவி சிவாநிதா, உயிர்வேதியியலை முதன்மை பாடமாக எடுத்து 187 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தை பிடித்துள்ளார். அவர், சமஸ்கிருதம் 192, ஆங்கிலம் 175, இயற்பியல் 179, வேதியியல் 186, உயிரியல் 168 என மொத்தம் 1087 மதிப்பெண் பெற்றுள்ளார்.சிவாநிதா கூறுகையில், ‘தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் இந்த சாதனையை படைக்க முடிந்துள்ளது. அன்றாடம் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை படித்துவேன். எதிர்காலத்தில் டாக்டர் படித்து ஏழைக்கு சேவை செய்வேன்’ என்றார்.